Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-6


          வாசியோகம்.
                        வாசியோகம் என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.                                                                        
                                                 

                                சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் : வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும். 

                               புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள் வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள். 

                                வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே. மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும். அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும். மேலே தூக்கும். மனமும், வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும். இந்நிலையில் தன்னைத் தான் காணலாம். சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான். தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும். இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம். இதனால் ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும். புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப் போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும். இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம். அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம், கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம். 
                        இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு, மரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும். மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும். இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம் நடப்பதைக் காணவும், தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும். இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.

                                  காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால், மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை. 

                                   புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம், ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும், கருவிகளும் செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன. புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.

                      குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம், மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும். அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.

                             இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.

                   புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும். ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும். இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும். 
 
                            பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும். உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும். பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம். மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும். மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம் பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம். இதற்கே மறு பிறவி கிடையாது.

ஆயகலைகள் அறுபத்தி நான்கு -சித்தர்கள்.

                                சித்தர்களின் அடிப்படையில் 64 ஆயகலைகள், 48 அருட்கலைகள், 9 கடவுட்கலைகள், 9 தெய்வீகக் கலைகள், 9 நோய்க் கலைகள், 9 பேய்க்கலைகள், 9 தேய் கலைகள் என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும், தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் செயலகங்களாக ஆதியில் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் படைக்கப் பட்டன. கால வேகத்தாலும், கருத்து வளர்ச்சியாலும், தேவையாலும் 48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையங்கள் தோற்றுவிக்கப் பட்டன. இவை காலந்தோறும் தோன்றிய அருளாளர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக வளர்ந்து விட்டன. அருளாளர்களும் காலங்கள் தோறும் தங்கள் தங்களுடைய பத்தி நிலைகள், சத்தி நிலைகள், சித்தி நிலைகள், முத்தி நிலைகள் முதலியவைகளுக்கேற்பத் தங்களுடைய அநுபவங்களைப் பத்தி இலக்கியங்களாகப் படைத்திருக்கிறார்கள். ஆயகலைகள் அறுபத்தி நான்கு -சித்தர்கள் ஆயகலைகள் அறுபத்தி நான்கில் (சிலவற்றை தவிர) சிறந்து விளங்கியிருக்கின்றனர். அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கியதாக கூட கருத்துகள் நிலவுகின்றன. இக்கூற்று எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.ஆனால் ஒவ்வொறு சித்தரும் ஒரு கலையிலாவது சிறந்து விளங்கியிருக்கின்றனர். போகர் என்னும் சித்தர் சிற்பங்களை வடிப்பதில் வல்லவராக திகந்திருக்கிறார், பாம்பாட்டி சித்தர் விஷமுறிவு மருத்துவதுறையிலும், அகத்தியர் முதலானோர் எழுத்தாற்றல் கலையிலும் சிறந்து விளங்கி உள்ளதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

                    சரி அறுபத்தினான்கு கலைகள் என்னென்ன? என்று தெரிந்தால் தானே நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். அதற்காக இங்கே பட்டியல். இந்த பட்டியலும் காலத்திற்கு ஏற்றாற் போல மாறுபட்டுள்ளது. முதல் பட்டியல் -
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு; 18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);20. நாடகம்;
21. நடம்; 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை); 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை); 30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை); 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை); 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்); 46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
 51. வான்செலவு (ஆகாய கமனம்);52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்
1. பாட்டு (கீதம்);2. இன்னியம் (வாத்தியம்);3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்); 12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);14. மாலைதொடுக்கை;15. மாலை முதலியன் அணிகை;16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;18. விரை கூட்டுகை;19. அணிகலன் புனைகை;20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை; 25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; 29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை; 36. மனைநூல் (வாஸ்து வித்தை);37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி); 47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை; 49. பொறியமைக்கை;50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை; 53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);55. யாப்பறிவு;56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);59. சூதாட்டம்;60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).போர் பயிற்சிகள், யானையேற்றம்,குதிரையேற்றம் போன்ற மன்னர்கள் செய்யக்கூடிய கலைகளில் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகமே. சில சித்தர்கள் மன்ன்னாக இருந்து பின் சித்தர்களாக மாறியவர்கள் என்பதனை நாம் மறக்க கூடாது. ஆனால் அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்), வளிக்கட்டு (வாயுத்தம்பனம்), கண்கட்டு (திருட்டித்தம்பனம்), நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்),புதையற்கட்டு (கனனத்தம்பனம்),வாட்கட்டு (கட்கத்தம்பனம்),சூனியம் போன்றவற்றில் தேர்ந்திருப்பதற்கான வழிகள் உண்டு. சித்தர்களைப் பற்றிய செவிவழிச் செய்திகள் இதை உறுதி படுத்துகின்றன.

நந்தீசர்

                        நந்தீசர்      கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர். சிவகணங்களில் ஒருவரான நந்தீசர், கயிலாயத்தின் காவலர் எனப் புராணங்கள் கூறும். சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு இவர் காரணமானவர். இவர் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகி ஆகியோர்க்கு உபதேசம் செய்து சித்தர் மரபு தோன்றக் காரணமாக விளங்கியவர். அகத்தியர், போகர் போன்றோர் நந்தீசரைத் தம் பாடல்களில் குறிக்கின்றனர். வைத்திய, யோக, ஞானக் கலைகளில் சிறந்து விளங்கி, தாம் இயற்றிய நூல்களைத் தமது மாணாக்கர்கள் மூலம் உலகெங்கும் பரவும்படி செய்தார். சிவகணங்களில் ஒருவர் நந்தீசர் என்றும் அவர் மானிட வடிவம் பெற்று வாழ்ந்ததாக பல்வேறு கதைகள் சொல்கிறார்கள்.சிவகணங்களில் ஒருவரான நந்தீசர் பார்வதி தேவியின் அந்தப்புரத்தினை காவல் காத்து வந்தார். அப்போது அம்மையை தரிசிக்க அடிலகன் என்னும் அரசன் வந்தான். அம்மையின் அனுமதியின்றி யாரையும் உட்செல்ல விடமாட்டேன் என்று நந்தீசர் தடுத்தார். இதையறிந்த சிவன் கோபங்கொண்டு அவரை பன்னிரெண்டாண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து வரும்படி சபித்துவிட்டாராம்.பூலோகத்தில் சிலாத முனிவர் யாக பூமி உழுத போது, கண்டெடுத்த பெட்டியில் அந்தக் குழந்தை இருந்தது.அதற்க்கு வீரகன் என்று பெயரிட்டு, சிலாதர் தம்பதிகள் வளர்த்து வந்தனர்.தங்கள் குழந்தை பன்னிரண்டு வயதில் இறந்துவிடும் என்பதறிந்து மனம் வருந்தினர்.அவர்கள் வருத்தத்தை அறிந்த வீரகன் (நந்தீசர்) அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி,.கடுந் தவம் செய்ய ஆரம்பித்தான். ஆதன் விளைவாக சிவனார் அவனுக்குக் காட்சி கொடுத்து, நீ சிவலோகத்தில் சிரஞ்சீவியாய் வாழ்ந்திருப்பாய், சிவகணங்களின் தலைவனாகவும் விளங்குவாய், உனக்கு அனைத்து ஞானத்துடன்,சிவஞானமும் அருளினோம் என்று கூறு மறைந்தார்.நந்தீசர் தேவர்சஞ்சை( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தார்.நந்தீசரே திருமூலரின் குரு ஆவார்.வைத்திய காவியம், கலை ஞானம், கலைஞான சூத்திரம், நிகண்டு, கருக்கிடை, சம் வாதம், ஞான சூத்திரம் ஆகிய நூல்கள் நந்தீசர் எழுதியதாக அறிய முடிகிறது.இவரது சமாதி திருவாவடுதுறையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. நந்தி.1969 இல் வெளியிடப்பட்ட 6 ஆவது ஆண்டின் 7 ஆவது இதழ் இது. சென்னை செனாய் நகரிலிருந்து சித்த மருத்துவத்திற்காக சித்தமருத்துவக் குழுவினரால் வெளியிடப்பட்ட இதழ். இந்த இதழ் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. சமயம், சமூகம், தமிழ் இலக்கியம், சித்த வைத்தியம், மக்கள் உடல்நலம் என்கிற கூறுகளை உள்ளடக்கியதாக இதழ் வெளிவந்துள்ளது. மருத்துவர் பு.மு.வேணுகோபால் எழுதியுள்ள அகத்தியர் பற்றிய குறிப்பு அகத்தியர் என்ற பெயருடைய பலர் இருந்தனர் அவர்களைப் பற்றிய குறிப்பு எனப் பட்டியலிட்டுள்ளது. மரணமில்லா வாழ்வும், சித்தர் காயகற்பமும், கருவின் லீலைகள், மருத்துவ வெண்பா, பத்துப்பாட்டில் ஒரு பாட்டு, மரபுப்பாடல் என இதழ் இலக்கியத் தரமான மருத்துவ இதழாக மலர்ந்துள்ளது.

நந்திகேசுரர்.
                         சிலாதர் என்ற தவ முனிவர் இருந்தார். அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தது. இந்திரன் அவர் முன் தோன்றி சிவபெருமானை நோக்கித் தவம் புரியக் கூறினான். ஆனால் "கருவில் உதிக்காத குழந்தை வேண்டி தவம்புரி. கருவில் உதிப்பவர்கள் இறந்து விடுவார்கள். எல்லாவற்றையும் படைக்கும் கடவுள் பிரம்மன். ஹிரண்ய கர்ப்பன். அவர் கூட ஊழிக் காலத்தில் மறைந்து மீண்டும் மீண்டும் பிறக்கிறார். திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிப் பிறகே படைப்புத் தொழிலைத் தொடர்கிறார். ஆதலின் கருவில் தோன்றுவோர் மறைவர்" என்று அறிவுரை வழங்கினான்.  சிலாதர் கருவில் உதிக்காத குழந்தை வேண்டிக் கடும் தவம் புரிந்தார். அவர் உடல் முழுதும் கரையான் புற்று மூடியது. பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் அவருடைய தசை இறையாகியது. வெறும் எலும்புக் கூடே எஞ்சியது. அவர் தவத்தை மெச்சி சிவபெருமான் வரம் அளித்தார். "சிலாத உன் வேண்டுகோளுக்கு இணங்கிக் கருவில் தோன்றாத குழந்தையை உணக்கு அளிக்கிறேன். அந்தக் குழந்தையாக நானே உனக்கு தோன்றுகிறேன்" என்று அருள் செய்து மறைந்தார்.  சிலாதர் யாக அங்கணத்துக்கு வந்தார். அங்கு சிவ பெருமானின் அருளால் திவ்ய தேஜஸுடன் ஒரு குழந்தை காணப்பட்டது. தலையில் சடாமுடியும் மூன்று கண்களும் நான்கு கரங்களில் சூலம், பரசு, கதை, வஜ்ரம் ஆகிய படைகள் தென்பட்டன. அந்தக் குழந்தையைக் கண்டதும் பிரும்மா முதலிய தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்ஸரப் பெண்கள் எல்லாம் ஆனந்தக் கூத்தாடினர்.  கால சூரியனுக்குச் சமமான தேஜுடைய அந்தக் குழந்தையை எடுத்து பிரும்மா, விஷ்ணு, ருத்ரர், ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி முதலிய அனைத்தது தேவதைகளும் மகிழ்ந்தனர். சிலாத மகரிஷி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு எனக்கு மகவாக தோன்றியிருக்கும் பெருமானே உன்னை வணங்குகிறேன். ஆனந்தத்தை அளிப்பதால் இந்தக் குழந்தையை நந்தி என்று அழைக்கிறேன் எனப் பெயரிட்டு அக்குழந்தையைத் தம்குடிலுக்கு எடுத்துச் சென்றார்.  அவர் குடிலுக்குச் சென்றதும் அக்குழந்தையின் தெய்வீக உருவம் மறைந்தது. இரண்டு கைகளையுடைய சாதாரண மானிடக் குழந்தையாக மாறி விட்டது. ஆதலால் வருந்திய சிலாதர் அந்தக் குழந்தைக்குப் படிப்படியாக நான்கு வேதங்கள், ஆயுர்வேதம், தனுர் வேதம், கந்தர்வவேதம், அச்வ வேதம், கஜசாஸ்திரம், மனுஷ சாஸ்திரம் முதலிய பல சாஸ்திரங்களைப் போதித்தார்.  அந்தக் குழந்தைக்கு எழு வயது ஆகும் போது மித்ரன் வருணன் என்ற இரண்டு ரிஷிகுமாரர்கள் வந்தனர். அவன் தேஜஸைக் கண்டனர். அவன் தந்தையிடம் சென்று, இன்னும் ஒராண்டுக்குள் இவன் இறந்துவிடுவான் என்று கூறிச் சென்று விட்டனர். அதனால் சிலாதர் மனம் உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்டு நந்தி சிவனை நோக்கிக் கடும் தவம் புறிந்தான். அவன் தவத்தை கண்டு சிவன் தேவியுடன் நந்தியின் முன் தோன்றினார். நந்தியைத் தன் இருகரங்களாலும் இறுகத் தழுவிக் கொண்டு இன்று முதல் உனக்கு மூப்பு இறப்பு என்பது ஏதும் இல்லை. எனக்கு நிகரான ஒளியும், வலிமையும், யோகமும் பெற்று என் விருப்பத்துக்கு உகந்தவனாக என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாக நீ விளங்குவாய். என் அருகிலேயே விளங்குவாய் என்று அருள் புரிந்தார். அழகிய மாலையை எடுத்து நந்தியின் தலையில் சூட்டினார்.
                   உமையன்னை நந்திகேசுரரைக் கரத்தில் எடுத்து அணைத்து ஆனந்த பாஷ்பம் பெருகினார். சிவபெருமானின் ஜடையிலிருந்து விழுந்த நீரும், தேவியின் ஆனந்தக் கண்ணீரும், சிவபிரானின் வாகனமாம் காளையின் பெரும் கர்ஜனையில் தோன்றிய நீரும், மேகம் பொழிந்த நீரும், ஜாம்பூநாதமான மகுடத்திலிருந்து விழுந்த நீரும் அவர் மீது விழுந்து ஐந்து நதிகளாக ஒடின. ஆதிலின் அவை பஞ்சநதம், ஐயாறு என்று பெயர் பெற்றன.  அன்றிலிருந்து நந்திகேசுரர் சர்வலோகத்துக்கும் அதிபதியாகவும் எல்லாக் கணங்களுக்கும் தலைவராகவும் முடிசூட்டப்பட்டார். ஈசுவரரின் அதிகாரியாக எப்பொழுதும் அவர் அருகிலேயே அழியாத் தன்மையுடன் விளங்குகிறார். என்று நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது இந்தச் செய்தி புராண மரபு.  இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் சாலங்காயன கோத்திரத்தில் சிலாதர் அல்லது சிலாசினி என்ற முனிவர்க்கு மகனாகப் பிறந்து தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம். அவருடைய ஆற்றலையும் தொண்டையும் கண்டு வியந்த மக்கள் அவரை ஈசுவரருடைய அவதாரமாகவே கொண்டனர் என்று கருதத் தோன்றுகிறது.  நந்திகேசுரர் அளித்த நூல்களில் இப்போது மிகவும் கற்கப்பட்டு, போற்றப்படும் துறைகள் தத்துவமும் நாட்டியமும் ஆகும். நாட்டியக் கலையில் பெரும்பாலானவர்கள் இப்பொழுது நன்கு அறிந்திருப்பது நந்திகேசுவரர் இயற்றிய "அபிநயதர்ப்பணம்" என்ற நூலாகும்.  சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.  
                  அம்முறைதன்னை நந்திகண்டே நாலாயிரம் கிரந்தமாக அருளிய அதனை பரதமுனிவன் அறிந்து அரன் நோக்கியே நடிக்க என்று உள்ள செய்யுள் இதைத் தெளிவாக்குகிறது. பரத நாட்டிய சாஸ்திரம் நந்திகேசுவரரைத் தண்டுரிஷி என்று குறிக்கிறது. சிவபெருமான் நாட்டியத்தில் பயன்படுத்தக்கூடிய அங்க பிரயோகங்களைத் தண்டுவின் மூலமாக பரதருக்கு கற்றுக் கொடுத்தார்.  "தத: தண்டும் சமாஹுய புரோக்தவான் புவனேஸ்வர: பிரயோகம் அங்கஹாரானாம் ஆசக்ஷவ பரதாய வை"  என்பது அச்செய்யுள். தண்டு முனவரிடமிருந்து பிறந்தது தாண்டவம். அபிநவகுப்தர் என்று புகழ்வய்ந்த உரையாசிரியர் தண்டு என்ற சொல் நந்திகேசுவரரைக் குறிக்கும் என்கிறார். சார்ங்கதேவர் என்ற மற்றொரு நூலாசிரியர் தம் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூலில் பரதருக்கு நிருத்தபிரயோகங்களை தண்டு கற்றுக் கொடுத்தார் என்பதுடன் அவர் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவர் கணாக்ரனீ என்றும் கூறுகிறார்.  "நிருத்த ரத்னாவளி" என்ற நூலை 13 ஆம் நூற்றாண்டில் இயற்றய ஜயசேனாபதி என்பவர் இவரை "பட்டதண்டு" என்று அழைக்கிறார். இவற்றிலிருந்து நந்திகேசுவரர் தண்டுரிஷி என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர் உண்மையில் வாழ்ந்த வரலாற்றுப் பாத்திரம் என்றும் அறிகிறோம். அவரே பரத முனிவருக்கு நாட்டியக் கலையைப் போதித்தவர். இன்றைய நாட்டியக் கலையின் தந்தை என்று அவரை அழைக்கலாம்.  தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் நாட்டியாசாரியரைக் குறிக்கும் தொன்மையான உருவம் இதுவே.  காஞ்சிபுரத்தில் இராஜசிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார். கால்களைச் சுவஸ்திகமாக்கி நந்திமுகத்துடனும், மனித உடலுடனும் சதுர தாண்டவம் புரியும் நந்திகேசுவரரின் நடனம் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள கருத்தையும் தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதையும் காட்டுகிறது.  நந்திகேசுவரர் சிறந்த நாட்டியசார்யராக மட்டும் இல்லாமல் சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார்.
                     அம்பலத்தரசர் ஆடுகின்ற போது நந்தி மத்தளம் வாசிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் பல சிற்பங்களும் ஓவியங்களும் இக்காட்சியைச் சித்தரிக்கின்றன. "குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக் கொண்டார்" என்பது தேவாரம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை பாரசவர் என்ற குலத்தோர் வாசிக்கின்றனர். அண்மையில் கிடைத்த "பஞ்சமுக வாத்தியலக்ஷணம்" என்னும் சுவடியில் இது நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆதலின் வாத்ய சாஸ்திரங்களிலும் நந்திகேசுவரர் சிறந்தவர் என்பது தெரியவருகிறது.  தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள நாட்டிய நாடகங்களில் தொடக்கத்தில் வரும் பாத்திரத்தை முறையே "கட்டியக்காரன்" என்றும் "சூத்திரதாரி" என்றும் அழைப்பர். கட்டியக்காரன் ஜனரஞ்சகமான நாட்டியத்தை ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவான். அவன் கையில் "வேத்ரம்" என்ற "கோல்" இருக்கும். கட்டியக்காரன் என்னும் பாத்திரம் நந்திகேசுவரரைக் குறிக்கும். கும்பேசர் குறவஞ்சி என்னும் நாட்டிய நூல் "நந்திவாகனாம் கட்டியக்காரன், திகைக்க வெண்ணீறு பூசிச் செயஞ்செயமென வந்தானே" என்று கூறுகிறது. நந்தியாக முதலில் வந்து மொழிவதால் "சூத்ரதார வசனத்தை" சம்ஸ்கிருதத்தில் "நாந்தி" என்று சொல்லுவார்கள்.  காமசாஸ்திரத்தை தோற்றிவைத்தவரும் நந்திகேசுவரரே என்றும் பல நூல்கள் கூறுகின்றன. வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் என்னும் நூல் மூன்று முனிவர்களைக் குறிக்கிறது. தர்மசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் "மநு" என்றும் அர்த்தசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் "பிருஹஸ்பதி" என்றும் காமசாஸ்திரத்தை இயற்றியவர் "நந்திகேசுவரர்" என்றும் கூறுகிறது. நந்தி இயற்றிய பல செய்யுட்களை "ரதிரகசியம்" என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.  சிவபெருமான் சீகண்ட பரமேசுவரராகப் பதினெட்டுப் புராணங்களை நந்திதேவருக்குக் கூறினார். நந்தி அவற்றைச் சனந்தகுமாரருக்கு கூற அவர் அதை வேதவியாஸருக்குக் கூறினார் என்றும், அவரிடம் சூதபௌளராணிகர் அறிந்தார் என்றும் கூறுவர். ஆதலின் புராணங்களை எடுத்துரைத்த மரபும் நந்திகேசுவரரையே சாரும் என்றும் அறிகிறோம். 
                      ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. நந்திகேசுவரரிடமிருந்து சிவதத்துவத்தை அறிந்து நந்தீசர் பிறருக்குப் போதித்தார் என்று ரௌளரவாகமம் கூறுகிறது. சைவமரபில் தலையாயது "சிவஞான போதம்" என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார் என்றும் அந்த மரபே இந்நூல் என்றும் பல நூல்கள் குறிக்கின்றன. சிவஞான போதச் சிறப்புப் பாயிரத்தில்  மயர்வற நந்தி முனிகணத்தளித்த உயர் சிவஞான போத மளித்தோன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் "அருள் நந்தி தனக்கியம்ப நந்தி கோதில் அருட் சனற்குமாரருக்குக் கூற" என்று சிவஞானசித்தியார் என்னும் நூல் குறிக்கிறது. திருமூலர் சிவபெருமானையே நந்தி என்று பல இடங்களில் குறிக்கிறார். நந்தி அருளாலே நாதனாம் பெயர் பெற்றோம் என்கிறார். சைவசித்தாந்த மரபு முழுவதும் நந்திகேசுவரர் மரபு என்பதில் ஐயமில்லை.  சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர். மற்றவர் மாகாளர் என்பவர். வழிபாட்டில் நந்திகேசுவரருக்கு முதலிடம் வழங்கப் படுகிறது. அவர் "சர்வலோகாதிபதி" ஆதலாலும், கணங்களின் தலைவர் ஆதலாலும் "அதிகாரி" என்றும் அதிகாரநந்தி என்றும் அழைக்கப்பட்டார்.  தாராசுரத்தில் முன்மண்டபத்திலிருந்து கர்ப்பக் கிருகத்துக்குள் நுழையும் போது அதிகாரநந்தியின் உருவத்தைப் பார்க்கலாம். இரு கரங்களை கூப்பி நீண்டவாளை மார்பில் இடுக்கி ஜடாமகுடத்துடன் நெற்றிக் கண்ணுடன் இவர் நிற்பார். சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். நான்கு கரங்களுடனும் சிவபெருமானுக்குரிய சின்னங்களுடன் இவர் காணப்படுகிறார். மேலிரு கரங்களில் மானும் மழுவும் உண்டு. கீழ்க்கரங்கள் கும்பிடும் நிலை சடை முடியும் நெற்றிக்கண்ணும் உண்டு.  மருத்தினுடைய பெண்ணாகிய "சுயஸ்" என்பவளை நந்திகேசுவரர் மணந்தார். அவளும் அவருடன் நிற்பதைக் காணலாம். அதிகார நந்தி மனித உருவுடன் கோபுரத்தின் நுழைவாயில் உள்ளது குறப்பிடத்தக்கது. சிவபெருமானின் பிரதான அதிகாரி ஆதலின் இவரது பார்வையிலேயே உள்ளே செல்லவும் வெளியே வரவும் இயலும். அருள்பாலிப்பதும், அறிவுரை புகட்டுவதும், தண்டனை அளிப்பதும் இவரே. ஆதலின் கோயில் கோபுரவாயிலில் உள்ள இவரது அனுமதி பெற்றே சிவாலயத்துள் செல்ல வேண்டும். இது தத்துவம். பரமேசுவர தத்துவம் நந்திகேசுவரர் மூலமாக உலகில் வெளிப்படுகிறது. அந்தத் தத்துவத்தைத் தாங்கி உலா வருவது இவரே. அதுவே அதிகார நந்தி சேவை என்னும் தத்துவம். பரமேசுவரனைத் தம் முதுகில் தாங்கி வருவதாகப் பாவனை. 
                    இராமாயணத்தில் மிகவும் உன்னத பாத்திரம் அனுமன். அறிவின் சிகரமாக, சொல்லின் செல்வனாக, வீரர்களின் தலைவனாக, தூதுவர்களில் ஈடு இணையற்றவனாக, ஆற்றலும் தூய்மையும் நிறைந்த அமைச்சனாக, அனைத்துக்கும் மேலாகப் பக்தியின் உருவகமாக திகழ்வது அனுமானே. அத் தன்னேரில்லாத தகைமையாளன் யார்? நந்திகேசுவரரின் மறு அவதாரமே அனுமான்.  ஒரு முறை இராவணன் கைலயங்கிரிக்குச் செல்ல நந்தி அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆதலால் கோபம் கொண்டு அவரைக் குரங்கு மூஞ்சி என்று இழித்துரைத்தான். குரங்காகவே வந்து உன்னை அழிக்கிறேன் போ! என்றார் நந்தி. ஆதலால் பலமுறை அனுமனைக் கண்டபோது நந்தியே அனுமனாக வந்திருக்கிறானோ என்று திகைத்தான் தசமுகன் என்று வால்மீகி கூறுகிறார்.  சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது. இராமர் பரபிரும்ம தத்துவம் அனுமன் அவர் காலடியில் அமர்ந்து வாசிக்க அத்தத்துவத்தை ராமர் போதித்ததாகக் கூறுவது நம்மரபு.  அக்ரே வாசயதி பிரபஞ்சனசுதே தத்வம் முனிப்ய: பரம் வியாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் இராமம் பஜே சியாமளம் என்பது நாளும் படிக்கின்ற ஸ்லோகம். இது நந்திகேசுவர தத்துவத்தின் மறு வடிவம்.  இந்திய நாட்டு மக்களின் வாழ்வில் நந்திகேசுவரர் நாட்டியாச்சாரியாராக கலைகளின் பிறப்பிடமாக வைத்திய முறைகளைப் போதித்தவராக புராண ஆகம முறைகளைப் போதித்தவராக யோகியாக தத்துவத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார் என்பது நாம் அறிய வேண்டிய பண்பு. 

அகத்தியர்.

                           தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார். பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர்தான்.தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர். வடக்கே இமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும் இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது! பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார். இவை போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழி கதைகளும் வழங்கப் படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர்.மனைவியின் பெயர் லோப முத்திரை, மகன் பெயர் சங்கரன். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.அத்துடன் இவர் எழுதிய
அகத்தியர் ஐந்து சாத்திரம்,
அகத்தியர் கிரியை நூல்,
அகத்தியர் அட்டமாசித்து,
அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம்,
அகத்தியர் வாகட வெண்பா,
அகத்தியர் வைத்திய கௌமி,
வைத்திய ரத்னாகரம்,
வைத்தியக் கண்ணாடி,
வைத்தியம் 1500,
வைத்தியம் 4600,
செந்தூரன் 300,
மணி 400,
வைத்திய சிந்தாமணி,
கரிசில்பச்யம்,
நாடி சாஸ்திரப் பசானி,
பஸ்மம்200,
வைத்திய நூல்கள் பெருந்திரட்டு,
சிவசாலம்,
சக்திசாலம்,
சண்முக சாலம்,
ஆறேழுத்து அந்தாதி,
கர்மவியாபகம்,
விதி நூன் மூவகை காண்டம்,
அகத்தியர் பூஜா விதி,
அகத்தியர் சூத்திரம் 30,
அகத்தியர் ஞானம்
என்ற நூல்கள் முக்கியமானவையாக போற்றப் படுகிறது.
                          இத்துடன் "அகத்தியம்" என்னும் ஐந்திலக்கணமும், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி நூலும் இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. அகத்தியர் அனந்த சயனம் என்ற திருவனந்த புரத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. அகத்தியர் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும் பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்; வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப் பற்றிப் பேசப்படுகின்றன. இவர் முருகப் பெருமானிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றவர். இவரைக் கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ் முனி, குட முனி என்று பல பெயர்களால் சிறப்பித்துக் கூறுவர். அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் புலஸ்தியர், தேரையர், தொல்காப்பியர் குறிப்பிடத்தக்கவர்கள். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர் இவருடைய மாணவர்களில் ஒருவர் என்றும் கூறுவார்கள். அகத்தியரிடம் இருந்தே ஒரு சித்தர் மரபு தொடங்கியது எனலாம். அகத்தியர் மருத்துவம், ஞானம், நாடி சாஸ்திரம், சோதிடம், யோகம், மந்திரம் போன்ற பல துறைகளில் பல நூல்களைப் படைத்துள்ளார் என்பர். அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன. முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
                            இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார்.தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம்என்னும் நூலை இயற்றினார்.அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார். வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர்.அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் வாதாபே ஜீர்ணோ பவஎன்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான். சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காக உருகொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர். புதுச்சேரிக்கு அருகிலுள்ள உழவர் கரையில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி அகத்தீஸ்வரம்என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

2 comments:

  1. உள் புருவ மத்தி எது ?
    http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_9061.html
    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete